அஹோராத்ரபுஷ்கரிணி
திருவிண்ணகரப்பன் என்னும் ஸ்ரீநிவாஸனுடைய ஆலயத்திற்குள் வடபுறத்தில் " அஹோராத்ர புஷ்கரிணி" என்ற ஒரு பொய்கை இருக்கின்றது. இதற்கு இந்தப் பெயர் வந்த காரணம் வருமாறு :-
முன்னொரு காலத்தில் " தேவசர்மா" என்ற ஓரந்தணன், வேதங்களிலும் அவற்றின் அங்கங்களிலும் கரை கண்டவன், பரத்வாஜ முனிவரின் மரபில் தோன்றியவன், சாஸ்திரங்கள் பலவற்றையும் கற்றறிந்தவன். அவன் ஒரு கால் காதல் நோய்வாய்ப்பட்டு சோலையில் பூக்கொய்து கொண்டிருந்த ஜைமினி முனிவரின் புத்திரியைக் கட்டயப்படுத்திச்சேர்ந்தான். அக்கன்னி தன் தந்தையான ஜைமினி முனிவரின் நிலையையறிந்து மிகச்சினந்து தம் புதல்வியைக் கெடுத்த அந்தணனைக் கிரௌஞ்சமென்னும் பட்சியாகுமாறு சபித்தார்.
தேவசர்மா அதைக்கேட்டு மிக வருந்தித் தன் குற்றத்தை மன்னித்து சாபத்தினின்றும் விடுவிக்கும்படி அவரடிகளில் விழுந்து தொழுது வேண்டினான். அம்முனிவர் கருணைகூர்ந்து அவனைப் பறவையுருக்கொண்டவுடன் மார்க்கண்டேயசேஷத்ரம் சென்று ஆலயத்திற்குள் இருக்கும் பொய்கைக் கரையில் ஒரு மரக்கிளையில் தொங்கி நிற்கும்படியும், பின் ஒருகால் அந்தக் கிளை ஒரு புயற்காற்றினால் பொய்கையில் விழும்போது அதன் புண்ணிய நீர் அப்பறவையின் மீது பட்டு சாபம் நீங்குமென்றும் கூறினார். இவ்வாறு ஜைமினி முனிவர் உரைத்ததும் அவ்வந்தணன் உடனே கிரௌஞ்சமெனும் பறவையுருப் பெற்றான்.
திருவிண்ணகரில் எம்பெருமானது ஆலயத்துள் இருக்கும் பொய்கைக் க்ரையில் உள்ள ஒரு மரத்தின் கிளையில் அப்பறவை தொங்கிக் கொண்டு நின்றது. சில நாள் கழிந்தபின் முனிவர் கூறியபடி ஒரு பெரும் புயல் வீசியது. அதனால் நள்ளிரவில் அக்கிளை புஷ்கரிணி நீரில் விழுந்தது. அப்பொழுது அந்த நீர் பறவையின் மீது பட, பறவை சுய வடிவம் பெற்றது.
|